மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தலைஞாயிறு என்ற ஊர். இங்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ திருக்கோவில் அமைந்துள்ளது. இந்திரன், தான் செய்த குற்றம் ஒன்றை பொறுத்தருள வேண்டும் என்று, இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றான். இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ என்ற பெயர் வந்தது.
சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படுபவர், வசிஷ்டர். அவர் ஒரு முறை ஞானம் பெறுவதற்காக, பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரை சந்தித்த பிரம்மன், “தர்மம் ஒன்று செய்தால், அதன் பலன் பத்து மடங்காக கிடைக்கும் ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு சென்று சிவபூஜை செய்தால், ஞானம் பெறலாம்” என்று, இத்தல பெருமையைக் கூறி அனுப்பினார். வசிஷ்டரும் இந்த திருத்தலம் உள்ள பகுதிக்கு வந்து சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட்டதன் மூலம் ஞானம் பெற்றார்.
இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.