விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் மலைக் குன்றின் மீது முருகப்பெருமான் கோவில் இருக்கிறது. இது சூரபத்மன் வழிபாடு செய்த திருத்தலமாகும். இங்கு மயில் வடிவ மலை உருவத்தில் சூரபத்மன் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.
மயிலம் மலையில், நொச்சி மரங்கள் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள். மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும், மயிலும் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது, மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களில் இருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம்.