உங்களை சுற்றி எப்போதும் கண்ணுக்கு புலப்படாத சில சக்திகள் சுற்றி கொண்டே இருக்கும். அது உங்களது அப்போதைய எண்ணங்களை மாற்றி அமைக்க காரணமாக இருக்கும். அதை தான் நாம் ‘நெகட்டிவ் எனர்ஜி’ என்கிறோம். எதிர்மறை ஆற்றல் என்பது கண் திருஷ்டியினால் ஏற்படலாம், பொறாமை, பில்லி, சூனியம், ஏவல் போன்று வேறு எந்த காரணத்திற்காகவும் ஏற்படலாம். இவ்வளவு ஏன்? கிருமிகள் மற்றும் வாஸ்து கூட எதிர்மறை ஆற்றலை வெளிவிடும். இந்த நெகட்டிவ் எனர்ஜிகள் நம்முடைய உடலில் இருக்கும், வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றலை முடக்கி நம்மை சுற்றி பிரச்சனைகளை உருவாக்கி விடும். இதனால் உடல் ஆரோக்கியம், குடும்பத்தில் நிம்மதி, தொழில் விருத்தி, வியாபார மந்தம், மன அமைதி போன்றவற்றில் தாக்கம் ஏற்பட்டு நம்முடைய அமைதியை கெடுத்து விடும். இந்த நெகட்டிவ் எனர்ஜியை துரத்தி அடிக்க சுலபமான ‘டிப்ஸ்கள்’ இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மஹாலக்ஷ்மியின் அம்சமாக விளங்கும் கல் உப்பிற்கு நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. வாரம் ஒரு முறை வீட்டை சுத்தம் செய்யும் நீருடன் சிறிது கல் உப்பு போட்டு துடைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் எதிர்மறை ஆற்றல் நீங்கும்.
2. மாதம் ஒரு முறை சாம்பிராணியுடன் வெண்கடுகு, நொச்சி, கோரோசனை, விஷ்ணுக்ராந்தி இவற்றை சேர்த்து தூபம் போட்டு வீடு முழுவதும் காண்பித்து வந்தால் தீய சக்திகள் ஓடி விடும்.
3. வரிக்குமட்டி என்ற ஒரு காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி ஞாயிறு, செவ்வாய், அமாவாசை போன்ற தினங்களில் நான்காக வெட்டி குங்குமம் இட்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், வீட்டையும் திருஷ்டி சுற்றி போடுவது போல் போட்டால் துஷ்ட சக்திகள் அனைத்தும் ஒழிந்து விடும்.
4. சாம்பல் நிற பூசணிக்காய் ஒன்றை வாங்கி சிறு துளை போட்டு குங்குமம் இட்டு துளையை மூடி அதன் மேல் கற்பூரம் ஏற்றி வீட்டை ஒருமுறை வலம் வந்து அதனை கொண்டு போய் முச்சந்தியில் உடைத்து விட்டு வந்தால் துஷ்ட சக்திகள், திருஷ்டிகள், மாந்த்ரீக ஏவல்கள் அனைத்தும் பறந்து விடும்.
5. வீட்டின் ஒரு மூலையில் பீங்கானில் சுத்தமான நீருடன் கல் உப்பு கரைத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்மறை ஆற்றல் பதிப்புகள் குறையும்.
6. அதே போல் கண்ணாடி தம்ளரில் சுத்தமான நீருடன் எழுமிச்சம் பழத்தை போட்டு கண்படும் படி எங்கேனும் வைத்து விட்டால் போதும். திருஷ்டிகள் ஒழிந்து விடும்.
7. நாட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு இருக்கும் ஆகாச கருடன் கிழங்கு ஒன்றை வாங்கி வாசற்கதவிற்கு மேலாக கட்டி விட்டால் போதும் வீட்டிற்குள் நுழையும் தீய சக்திகளை அங்கேயே தடுத்து நிறுத்தி ஈர்த்து கொள்ளும்.
8. நுழைவு வாயிலில் படிகாரமும், மருதாணி இலை கொத்தையும், ஈசானிய மூலையில் கற்றாழையையும் கட்டி வைத்தால் துர் தேவதைகள் தடுக்கப்படும்.
9. நிலை கதவில் அல்லது நுழைவு வாயிலில் பச்சை மிளகாய், கரி துண்டு, எழுமிச்சை பழத்தை ஒரு நூலில் கோர்த்து தொங்க விட்டால் எதிர்மறை ஆற்றலை நீக்கும். வீடு மட்டுமில்லாமல் வாகனங்களிலும் இதை செய்வதால் வாகன விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். இதற்கு நெகட்டிவ் எனர்ஜியால் ஏற்படும் சோர்வு, மன பயம், தூக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் உண்டு.
10. ‘கோ’ வின் சாணம் மற்றும் கோமியம் இரண்டும் நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி பாசிடிவ் எனர்ஜியை வீட்டிற்குள் கொண்டு வரும் சக்தி பெற்றவை. வாரம் ஒருமுறை வாசலில் சாணம் போட்டு மொழுகுவது, மாவிலையால் வீடு முழுவதும் கோமியம் தெளிப்பது நல்லது.
இது போன்ற சிறு சிறு விஷயங்களை முடிந்த அளவு அவ்வப்போது பின்பற்றி வருவது எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை தரும். இதனால் நமக்கு வரும் கெடுதல்களை நீக்கி நல்ல எண்ணங்களை விதைத்து வாழ்வில் வளம் காணலாம். வருடம் ஒரு முறையாவது கணபதி ஹோமம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றி அமைப்பது, சூரிய ஒளியை வீட்டிற்குள் வரும் படி கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பது, இயற்கை வாசனை பொருட்களை பயன்படுத்தி வீட்டை இனிய மணத்துடன் வைத்திருப்பது, வீட்டில் சேரும் மக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது, அழுக்கு துணிகளை சேகரிக்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்து வந்தாலே போதும். நீங்களும், உங்களது இல்லமும் எப்போதும் ஆரோக்கியத்துடன், நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதில் சந்தேகமில்லை.