மயானக் கொள்ளை
🛕 மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.
🛕 துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.
🛕 பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்கு பார்வதியே காரணமாகக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதியை கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்! என சாபமிட்டாள். அதன்படி பார்வதி பூவுலகில் பல இடங்களுக்குச் சென்று முடிவில் மலையரசனுக்கு உரிமையான ஓர் நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாள். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள். மலையரசன் புற்றை கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்தான். இதனால் வந்திருப்பது அம்மையே என அனைவரும் அறிந்தனர். மலையனூர் என அறியப்பட்ட இவ்விடத்தில் இன்றும் மீனவ சமூகத்தினரே சேவை செய்கின்றனர்.
🛕 இந்தக் கோவிலிற்கு சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது; பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
🛕 ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரி மீது ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை வர வைப்பார்கள்.
🛕 மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு, தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.
🛕 பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல், கொழுக்கொட்டை, தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவாகியது.
🛕 சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.