Home ஆன்மீக செய்திகள் பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருநணா (கூடுதுறை)

பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருநணா (கூடுதுறை)

by admin
Sangameshwarar Temple Bhavani History in Tamil

Bhavani Kooduthurai Temple History in Tamil

🛕 கோவில் அமைப்பு: பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.

🛕 வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

🛕 தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானியும் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர். இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம். இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.

🛕 கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது.

🛕 அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன.

🛕 ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

🛕 இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.

🛕 கொங்கு நாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கும். இத்தலத்திலும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உண்டு. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.

Bhavani Sangameshwarar Temple Timings

🛕 இக்கோவிலில் காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 8-க்கு காலை சாந்தி, உச்சிக்காலம் 12 மணி, இடைக்காலம் மாலை 4.30 மணி, சாயரட்சை 5.15 மணி, அர்த்த ஜாமம் 7.30 மணி என ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்

அவிநாசியப்பர் கோவில், அவிநாசி

அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு

திருமுருகநாதர் கோவில், திருமுருகன்பூண்டி

கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர்

மகுடேஸ்வரர் கோவில், கொடுமுடி

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:

1. பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு எறு அது ஏறி

அந்தார் அரவு அணிந்த அம்மானை இடம்போலும் அம்தண் சாரல்

வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்

செந்தேன் தெளிஒளிரத் தேமாகங்கனி உதிர்க்கும் திருநணாவே.

2. நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை யேந்தி

ஈட்டும் துயரறுக்கும் எம்மான் இடம்போலும் இலை சூழ் கானில்

ஓட்டம் தரும் அருவி வீழும் விசைகாட்ட முந்தூழ் ஓசைச்

சேட்டார் மணிகள் அணியும் திரைசேர்க்கும் திருநணாவே.

3. நன்று ஆங்கு இசை மொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த

மின் தாங்கு செஞ்சடை எம் விகிதர்க்கு இடம்போலும் விரைசூழ் வெற்பில்

குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயிலாலும் சாரல் செவ்வி

சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடிபணியுன் திருநணாவே.

4. கையில் மழு ஏந்திக் காலில் சிலம்ப் அணிந்து கரித்தோல் கொண்டு

மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்கு இடம்போலு மிடைந்து வானோர்

ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்கச்

செய்ய கமலம் பொழில் தேன அளித்து இயலும் திருநணாவே.

5. முத்து ஏர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு

தொத்து ஏர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலை சூழ்ந்த

அத்தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத்தும்பி

தெத்தே என முரலக் கேட்டார் வினைகெடுக்கும் திருநணாவே.

6. வில் ஆர் வரையாக மாநாகம் நாணாக வேடம் கொண்டு

புல்லார் புரமூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும்

அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப அடியார் கூடிச்

செல்லா அருநெறிக்கே செல்ல அருள்புரியும் திருநணாவே.

7. கானார் களிற்று அவை மேல்மூடி ஆடு அரவு வன்று அரைமேல் சாத்தி

ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோவில் எங்கும்

நானா விதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்தத்

தேனார் மலர்கொண்டு அடியார் அடிவணங்கும் திருநணாவே.

8. மன்னீர் இலங்கையர்தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி

முந்நீர்க் கடல்நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம்

அல் நீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியும் முன்றில்

செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திருநணாவே.

9. மை ஆர் மணிமிடறன் மங்கையோர் பங்கு உடையான் மனைகள் தோறும்

கையார் பலியேற்ற கள்வன் இடம்போலும் ங் கழல்கள் நேடிப்

பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்

செய் ஆர் எரிஆம் உருவம் உற வணங்கும் திருநணாவே.

10. ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி

மூடு உருவம் உகந்தார் உரையகற்றும் மூர்த்தி கோவில்

ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சாரச்

சேடர் சிறந்து ஏத்தத் தோன்றி ஒளிபெருகும் திருநணாவே.

11. பல் வித்தகத்தால் திரைசூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்

நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞான சம்பந்தன் எண்ணும்

சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்

வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இம் மண்ணின் மேலே.

Arulmigu Bhavani Sangameshwarar Temple Address

🛕 Bhavani, Tamil Nadu 638301

You may also like

Translate »