Home ஆன்மீக செய்திகள் மஹாலய பட்க்ஷம் துவக்கம் 25.9.18 – 9-10-18:

மஹாலய பட்க்ஷம் துவக்கம் 25.9.18 – 9-10-18:

by Sarva Mangalam

Sep 25 முதல் Oct 9 வரை மகாளய பட்சம்:

மகாளய அமாவாசை மகிமை .

“மகாளயம்’ என்றால் “கூட்டமாக வருதல்’.
மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம்.
“பட்சம்’ என்றால் 15 நாட்கள்.
மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும்.
புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம்.
ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்
பித்ருக்களுக்காகவே 15 நாட்கள் நோன்பிருந்து, அந்தந்த நாட்களுக்கு உரிய பித்ரு பூஜைகளை செய்துக் கொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் உள்ள அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மகாளய அமாவாசை நாளாகும்.
மகாளய அமாவாசையன்று பித்ரு பூஜை, தர்ப்பண காரியங்கள், அன்னதானம் ஆகியவற்றை மனதாலும், வாக்காலும், சரீரத்தினாலும் சிறப்புடன் செய்து நிறைவாக பித்ருக்களை மனதார வணங்கிடல் வேண்டும். நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலேயே பித்ருக்கள் அருள்வார்கள்.
மதியம் 12 மணிக்குள் வருவதற்கு முன்னரே பித்ரு தர்ப்பணம் செய்வது உசிதம். தொடங்குவதற்கு முன்னர் நம்முடைய நியாயமான கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் முன் வைத்து பித்ருக்களின் ஆசி பெற வேண்டும். அதற்கு பின்னரே இறைவனை வழிபட வேண்டும்.
மகாளய பட்சத்தில் பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை விசேஷமான நாட்கள்தான். என்றாலும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு.
தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திபடுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்தால் மிகவும் விசேஷம்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மிகவும் முக்கியமான நாட்களாகும் என்பதால் குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.
பிரதமை முதலாம் நாள் அன்று செய்யப்படும் சிரார்த்தம் அல்லது தர்ப்பண காரியங்களுக்கு தன லாபம் கிட்டும்.
துவீதியை இரண்டாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜையால் சந்ததி விருத்தி உண்டாகும்.
திருதியை மூன்றாம் நாளன்று செய்யப்படும் பித்ரு காரியங்களுக்கு சிறந்த திருமண பாக்கியம் பெற்று நல்ல, மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
சதுர்த்தி நான்காம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனத்திற்கு சத்துருக்களை அகற்றும் சக்தி உண்டு.
பஞ்சமி ஐந்தாம் நாளன்று பித்ரு காரியங்கள் செய்வதால் சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.
சஷ்டி ஆறாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் உயர்ந்த புகழைப் பெறுவான்.
சப்தமி-ஏழாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் சிறந்த வம்ச விருத்தி பெறுவான்.
அஷ்டமி எட்டாம் நாளன்று சிரார்த்தம் மற்றும் தர்ப்பண காரியங்களைச் செய்பவன் சிறந்த புத்தியை அடைவான்.
நவமி ஒன்பதாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனைக்கு அழகுள்ள மனைவி அமைவாள்.
தசமி பத்தாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் இஷ்டப்பட்டதை எல்லாம் அடைவான்.
ஏகாதசி பதினொன்றாம் நாளன்று மனதார பித்ருக்களை வழிபட்டு சிரார்த்த, தர்ப்பண காரியங்களை செய்பவன் அனைத்து வேதங்களையும் பெறுவான்.
துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் ஸ்வர்ண லாபம் பெறுவான்.
திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவன் அறிவு ஞான சக்தி, பசுக்கள் தேஹ ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம் அனைத்தும் பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
சதுர்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் செய்யப்படும் பித்ரு காரியங்களால் திருப்தி அடைவார்கள்.
மகாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை ஆராதித்து, மனதார வணங்கினால் சகல பாக்கியங்களும் கிட்டும்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால்
புண்ணியம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்…
இறைவன் அருளால் ,
வாழ்க வளமுடன் !

You may also like

Translate »